Sunday, September 29, 2024
Home » சோமங்கலம்-தாம்பரம் இடையே மீண்டும் நேரடி பேருந்து இயக்கம்: மக்கள் வலியுறுத்தல்

சோமங்கலம்-தாம்பரம் இடையே மீண்டும் நேரடி பேருந்து இயக்கம்: மக்கள் வலியுறுத்தல்

by Arun Kumar

ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் பகுதியில் இருந்து தாம்பரத்துக்கு மீண்டும் நேரடி பேருந்து சேவையை விரைவில் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், சோமங்கலம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக, கடந்த சில ஆண்டுகளக்கு முன் சோமங்கலத்தில் இருந்து தாம்பரம் வரை 2 அரசு பேருந்துகள் (தடம் எண் 18எஸ்) நேரடியாக இயக்கப்பட்டு வந்தன. இதேபோல், சோமங்கலத்தில் இருந்து குன்றத்தூருக்கு நேரடியாக தடம் எண் 88எம் எனும் 2 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குன்றத்தூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து சோமங்கலத்துக்கு நேரடியாக இயக்கப்பட்ட 4 அரசு பேருந்து சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதற்கு மாற்றாக, குன்றத்தூரில் இருந்து சோமங்கலம் வழியாக தாம்பரத்துக்கு 4 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் மாநகராட்சியின் உள்ளேயும், குன்றத்தூர் நகராட்சியின் உள்ளேயும் அரசு பேருந்துகள் வந்து செல்லும்போது வாகன நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் அப்பேருந்துகள் சரியான நேரத்தில் சோமங்கலத்துக்கு வருவதில்லை. ஒரே நேரத்தில் 3 அரசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன. அதன்பிறகு சில மணி நேரத்துக்கு அரசு பேருந்துகள் கிடைப்பதில்லை.

முன்பு, சோமங்கலத்தில் இருந்து தாம்பரம் மற்றும் குன்றத்தூருக்கு நாளொன்றுக்கு 16 முறை அரசு பேருந்துகள் இயங்கின. தற்போது சோமங்கலம் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் 10 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு சரியான நேரத்துக்கு அரசு பேருந்துகள் வராததால், காலை நேரத்தில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோரும் மாலையில் பள்ளி விட்டதும் மாணவர்கள் வீடு திரும்புவதற்கு நீண்ட காலதாமதமாகி வருகிறது. எனவே, இப்பகுதி மக்களின் அவலநிலையை கருத்தில் கொண்டு, சோமங்கலத்தில் இருந்து தாம்பரம் மற்றும் குன்றத்தூருக்கு மீண்டும் நேரடி அரசு பேருந்து சேவையை விரைவில் துவக்க மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

You may also like

Leave a Comment

five + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi