ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம்-நல்லூர் ஏரிக்கரை சாலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகத் தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் போது உயிராபத்து நிகழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இந்த மின்கம்பிகளை மிக உயரத்தில் மாற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், சோமங்கலம் அருகே பூந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள நல்லூர் ஏரிக்கரை வழியாக மேலத்தூர் செல்வதற்கு தார்சாலை உள்ளது. இதன் வழியாக நல்லூர், மேலாத்தூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு போன்ற கிராம மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நல்லூர் ஏரிக்கரை சாலையோரமாக 15க்கும் மேற்பட்ட உயர் அழுத்த மின்கம்பங்கள் உள்ளன. இக்கம்பங்கள் மிக நீண்ட இடைவெளியில் அமைந்துள்ளதால், இதில் பொருத்தப்பட்ட உயர் அழுத்த மின்கம்பிகள், கைக்கு எட்டும் தூரத்தில் மிகத் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏரிக்கரை சாலை வழியே நடந்தோ அல்லது இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கைகள் தவறுதலாக மின்கம்பியில் உரசும்போது, அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயநிலை நிலவி வருகிறது.
மேலும், இவ்வழியே பள்ளி மற்றும் தனியார் நிறுவன பெண் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன்களும் வேகமாக சென்று வருகின்றன. இவை தவறுதலாக சாலையை விட்டு சிறிது கீழே இறங்கினாலும், அந்த வாகனங்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்மீது சாயும் நிலை உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இந்த மின்கம்பிகளை உடனடியாக மிக உயரமாக மாற்றியமைத்து தரும்படி சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
எனவே, நல்லூர் ஏரிக்கரை சாலையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன், அங்கு கூடுதல் மின்கம்பங்கள் அமைத்து, அந்த மின்கம்பிகளை மிக உயரத்தில் மாற்றி சீரமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.