எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே ராணுவ வீரர் சரமாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வெம்பூரைச் சேர்ந்த வேலமுத்து – பாக்கியலட்சுமி தம்பதி மகன் வேல்முருகன் (24). திருமணமாகாதவர். ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வீரராக இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு மொட்டை மாடியில் தூங்க சென்றவர், நேற்று காலை நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை.தாய் பாக்கியலட்சுமி சென்று பார்த்தபோது வேல்முருகன் சரமாரி குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார்.
தகவலறிந்து மாசார்பட்டி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த மாரிச்சாமிக்கும் (30) வெம்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த பெண் வேல்முருகனிடமும் பழகி வந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் மாரிச்சாமி நேற்று முன்தினம் நள்ளிரவு வேல்முருகன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று, அவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து மாரிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.