அம்பத்தூர்: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (30). சினிமா தயாரிப்பாளரான இவர், கீழ்அயனம்பாக்கத்தில் சினிமாபட தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். இங்கு கொரட்டூர் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரி (28) (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், லிங்கேஸ்வரி கடந்த மே மாதம் 13ம்தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
அதில், சினிமாபட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் முகமது அலி என்பவரிடம் நான் வேலை செய்து வந்தேன். அப் போது அவர் என்னிடம் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்து வந்தார். மேலும் குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகள் கலந்து கொடுத்து தவறாக நடந்து அதை வீடியோவாக பதிவு செய்தார். இதனால் நான் கர்ப்பமடைந்த நிலையில், சத்து மாத்திரை என கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்தார். அதை சாப்பிட்டதால் கரு கலைந்துவிட்டது.
கருக்கலைப்பு குறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன். பாலியல் தொல்லை வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என மிரட்டினார். என்னிடம் 5 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளார். எனவே, அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா விசாரித்தபோது லிங்கேஸ்வரி வைத்த குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளரான முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.