ஊட்டி : ஊட்டியில் அதிகாலை நேரங்களில் நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் காணப்படும் மூடு பனி ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நீர் பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் உறைப்பனி விழும். இச்சமயங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனி மூட்டம் காணப்படும். மேலும், மாலை நேரங்களிலும் பனி மூட்டம் காணப்படும். சில சமயங்களில் பகல் நேரங்களிலும் பனி மூட்டம் காணப்படும். அதேபோல், அதிகாலை நேரங்களில் நீர் நிலைகளில் மூடு பனி காணப்படும். சூரிய ஒளி பட்டவுடன் நீர் நிலைகளில் இருந்து பனி துளிகள் ஆவியாக மாறி எழும்.
இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தற்போது ஊட்டியில் நாள் தோறும் லேசான நீர்பனி காணப்படுகிறது. குறிப்பாக, நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பள்ளதாக்கு பகுதிகளில் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், நீர் நிலைகளில் காலை நேரங்களில் காணப்படும் மூடு பனி ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஊட்டி ஏரி, தலைகுந்தா அணையில் இது போன்று காலை நேரங்களில் காணப்படும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். மேலும், இதனை புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.