திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஈக்காட்டில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் உதவி தோட்டக்கலை அலுவலர் மலர்மன்னன் பணியில் இருந்தார். அப்போது தோட்டக்கலை பண்ணையில் பணியாளர்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஒரு சாரை பாம்பு அலுவலகத்தின் உள்ளே புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து அலுவலகத்தை விட்டு வெளியேறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை நிலைய உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், சிறப்பு நிலைய அலுவலர் கே.ஞானவேல், ஹரிகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து வந்து அலுவலகத்தில் புகுந்த பாம்பை பிடித்தனர். அது சுமார் 7 அடி இருந்தது. இதன்பிறகு அந்த பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.