செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (59). இவரது மனைவி அஞ்சாலை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சலை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குளிர்சாதன பெட்டி அருகே மறைந்திருந்த நல்ல பாம்பு அஞ்சலையை கடித்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சலை வலியால் அலறித்துடித்தார். விரைந்து வந்த குடும்பத்தினர் அஞ்சலையை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சலை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, அஞ்சலையின் மகன் வேலு அளித்த புகாரின்பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.