போபால்: அரசியலில் பாதை வழுக்குகிறது. இதனால் சறுக்கிவிடுமோ என்ற பயம் உள்ளது என்று மபி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மபி சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் 79 பா.ஜ வேட்பாளர் பட்டியலில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பெயர் இல்லை. இதனால் அவருக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் கர்கோனில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்,’ எனக்கு எந்த பதவியின் மீதும் பேராசை இல்லை. எனது எலும்பும் சதையும் பயன்பட்டு மக்களுக்கு நல்லது செய்தாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என்றார்.
உஜ்ஜயினியில் உள்ள மஹாகல் மஹாலோக் கோயில் நடைபாதையை திறக்கும் விழாவில் நேற்று முன்தினம் இரவு கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: நாங்கள் நல்வழியில் நடப்பதை உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் (ஆன்மீக தலைவர்கள்) எங்களை சரியான திசையில் வழிநடத்த வேண்டும். ஏனென்றால் அரசியல் பாதை மிகவும் வழுக்கும். ஒவ்வொரு அடியிலும் சறுக்கிவிடுமோ என்ற பயம் உள்ளது. சில சமயங்களில் நாங்கள் நழுவுகிறோம், சில சமயங்களில் மற்றவர்களை நழுவச்செய்கிறோம். ஆனால் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்காக இருக்கட்டும். அதன்மூலம் நாங்கள் அறத்தின் வழியில் நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.