புதுடெல்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதான திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு கழக நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு சந்திரபாபு நாயுடு தொடர்ந்த மனுவை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அப்போது, ‘‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை விசாரணை செய்ய வேண்டும் என்றால் பிரிவு 17 ஏவின் கீழ் விசாரணைக்கான முன் அனுமதியை பெற வேண்டும். அத்தகைய ஒப்புதல் இல்லை என்றால் விசாரணை நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே அவரது பெயிலை மேலும் 50 நாட்களுக்கு நீட்டிப்பதாக நீதிபதி அனிருத்தா போஸ் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி பி.எம்.திரிவேதி, ‘‘நேர்மையற்ற அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்டப்பிரிவு 17ல் இருக்க முடியாது. அவ்வாறு அதனை பயன்படுத்தினால் நிலுவையில் இருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளை அது மேலும் தாமதப்படுத்தும். மேலும் பிரிவு 17 ஏவின் கீழ் முன் அனுமதி பெறுவதை குறையாக கருத முடியாது. ஏனென்றால் இதே விவகாரத்தில் ஐபிசி பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. எனவே அவற்றை ரத்து செய்ய இயலாது. இதனை அடிப்படையாகக் கொண்டு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த சட்ட விதிமுறை மீறலும் இல்லை எனவே சந்திரபாபு நாயுடுவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து சந்திரபாபு நாயுடு வழக்கில்.இரு மாறுபட்ட தீர்ப்புகள்.வழங்கப்பட்டுள்ளதால், வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.