சிவகாசி அருகே மதிமுக சார்பில் குறுங்காடுகள் திட்டம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை: சிவகாசியில் விஸ்வவனம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போன நீர்நிலையை மீட்டு மீண்டும் தண்ணீரை சேமிக்க வழிவகை செய்தனர். இதுபற்றி கேள்விப்பட்ட துரை வைகோ அவர்களை அழைத்துப் பாராட்டினார். மேலும், உதவிகள் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்புகளாலும், குப்பை கொட்டி வீணடிக்கப்பட்டு வருவதாகவும் தங்களிடம் கொடுத்தால் மரங்களை நட்டு பராமரிப்போம் என்றும் விஸ்வவனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளில் துரை வைகோ ஈடுபட்டார்.

விஸ்வவனம் அமைப்பை அறக்கட்டளையாக மாற்ற உதவி செய்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை சந்திக்க ஏற்பாடு செய்தார். மதிமுகவினர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள், குப்பை மற்றும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. பிறகு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு சொட்டுநீர் பாசன வசதியும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு லட்சம் மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் நட திட்டப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 1500 மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இதை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் துரை வைகோ தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், சதன் திருமலைக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!