சிவகாசி, ஏப்.29: சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களும் அகற்றப்பட்டது. சிவகாசியில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் பழம் உள்ளிட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இவை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதோடு விபத்திற்கும் வழி வகுத்தது. புதிதாக பொறுப்பேற்ற கமிஷனர் சங்கரன், சிவகாசியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளக்ஸ் போர்டுகளையும் அகற்ற உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று திருத்தங்கல் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி நகரமைப்பு அலுவலர் மதியழகன், ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்கள் நான்கு பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளும் அகற்றப்பட்டது.