சிறுவாபுரி கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த சோகம் 17 வயது சிறுவன் ஓட்டிய பைக் விபத்துக்குள்ளானதில் உடன் சென்ற கல்லூரி மாணவன் பரிதாப பலி: பைக் கொடுத்த வாலிபர் கைது

புழல்: புழல் அருகே சிறுவாபுரி கோயிலுக்குச் சென்றபோது 17வயது சிறுவன் ஓட்டிய பைக் லாரி மீது மோதியதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலியானார். இதில் சிறுவனுக்கு பைக் கொடுத்த அதன் உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர், ஜமாலியா தெருவைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ் (18). தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே கல்லூரியில் பயிலும் 17 வயதுடைய தனது நண்பனுடன் கடந்த 23ம் தேதி காலையில் சோழவரம் அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது, சிறுவன் பைக்கை ஓட்டிச்செல்ல, முகமது ரியாஸ் பின்னால் அமர்ந்திருந்தார். சிறுவாபுரி நோக்கி சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற 2 லாரிகளில் ஒன்று திடீரென பிரேக் போடப்பட்டு நின்றது. இதில் லாரியின் மீது மோதாமல் இருப்பதற்காக, பைக்கை சிறுவன் பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி 2 லாரிகளுக்கும் இடையே இருவரும் விழுந்தனர்.

அப்போது, மற்றொரு லாரியின் சக்கரத்தில் மோதி 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள், 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், முகமது ரியாஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலில் பலத்த காயமடைந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சிறுவன் வாகனத்தை இயக்குதல், அஜாக்கிரதையால் மரணத்தை விளைவித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், இவர்கள் பைக்கில் வேகமாக வந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு வாகனத்தை கொடுத்த உறவினரான புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினீத் (25) என்பவரை செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

8 உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

சிறையில் தூக்கமின்றி தவிக்கிறேன்: ஜாக்குலினுக்கு கடிதம் எழுதிய சிறை கைதி

இனக்கலவரத்திற்கு மூல காரணமான 900 மியான்மர் தீவிரவாதிகள் மணிப்பூருக்குள் ஊடுருவல்: உளவுத்துறை அறிக்கையால் பாதுகாப்பு படை உஷார்