சிறுமுகையில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

*உடந்தையாக இருந்த 4 ஆசிரியைகளிடம் விசாரணை

மேட்டுப்பாளையம் : சிறுமுகையில் 9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலங்கொம்பு அரசுப்பள்ளியில் 7, 8, 9ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேரை அப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் புகாரளித்தும் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முகவடிவு, கீதா, ஷியாமளா உள்ளிட்டோர் கண்டுகொள்ளாமல் அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் இடைநிலை ஆசிரியர் நடராஜனை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும், உடந்தையாக இருந்த 4 பெண் ஆசிரியைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘‘பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜன் ஒரு வாரத்திற்கு முன்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஆசிரியர்கள் மீது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு