இந்நிலையில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் சென்ற பின், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் 1500 கோடி ரூபாய் ஆகும். அதேபோல், சமீபத்தில் இக்கோயிலின் கண்காணிப்பாளர், தருமபுரம் ஆதினத்துடன் இணைந்து 8 ஏக்கர் நிலத்தை தனிநபருக்கு மாற்றியுள்ளது தெரியவந்தது. இதை எதிர்த்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, கோயில் நிலத்தை மீட்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகி, சீர்காழியில் உள்ள அருள்மிகு சட்டநாத சாமி கோயிலின் நிலங்களை தனிநபருக்கு மாற்றிய தருமபுரம் ஆதினம், கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 6 வாரங்களில் மனுதாரரின் புகார் மனு மீது உரிய பரிசீலனை செய்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.