பாடகர் மனோவின் மகன்கள் கால்பந்தாட்ட வீரர்கள் மீது போதையில் தாக்குதல்: வைரலாகும் வீடியோ; இருவர் கைது

சென்னை: பாடகர் மனோவின் மகன்கள் போதையில் கால்பந்தாட்ட வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் இரு மகன்களும் தலைமறைவானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுசம்பந்தமான வீடியோ வைரலாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவரது வீடு சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ளது. இவருக்கு ரபீக் மற்றும் ஜாகீர் என இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் கால்பந்து பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(20). மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் பயிற்சி செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை பகுதியில் உள்ள மனோவின் வீட்டின் முன்பு அவரது மகன்கள் போதையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர் பாடகர் மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் ஜாகீர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களது வீட்டை எதற்கு நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள் என்று கேட்டு 16 வயது சிறுவன் மற்றும் கிருபாகரன் ஆகியோரை பிடித்து தாக்கி உள்ளனர். இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிய நிலையில் சிறுவன் உட்பட இருவரை முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து சென்று அவர்களது நண்பர்கள் ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் போலீசாரை அழைத்து வந்தனர். இதையடுத்து காயம் அடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து, வளசரவாக்கம் போலீசார் ரபிக், ஜாகீர் உட்பட ஐந்து பேர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர். இதில் விக்னேஷ்(28), தர்மா(26) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறுவர்களை மனோமகன்கள் போலீசார் முன்னிலையில் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 500 பெண் பணியாளர்கள் தங்குவதற்கு 870 படுக்கை வசதியுடன் குடியிருப்புகள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்து

மாதவரத்தில் இருந்து உல்லாசத்துக்கு அழைத்து வந்தபோது தகராறு இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர்: துண்டு துண்டாக வெட்டி கொடூரம்; போலீஸ் அதிகாரி வீட்டு முன் வீச்சு; சென்னை துரைப்பாக்கத்தில் பயங்கரம்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்