அந்த தனியார் நிறுவனம் பெரியசாமியை கடந்த 10ம் தேதி விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் பெரியசாமி வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தது, அவருடைய பெற்றோருக்கு தெரியாது. இந்நிலையில் சில நாட்களாக பெரியசாமியிடம் இருந்து போன் எதுவும் வராததால், சங்கிலி பெரியசாமியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இதனையடுத்து சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டார். அவர்கள், பெரியசாமி கடந்த 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கை வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கிலி மகனை தேடி நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் விமான நிலைய காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கடந்த 10ம் தேதி சிங்கப்பூரில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் பெயர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில் பெரியசாமி சென்னைக்கு வந்து குடியுரிமை, சுங்கச் சோதனை அனைத்தையும் முடித்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றது தெரிய வந்தது. மேலும் பெரியசாமி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று விட்டு உடனுக்குடன் திரும்பி வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்காவது சென்று விட்டாரா, இல்லையேல் யாராவது கடத்தி விட்டனரா, காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.