சிங்கம்புணரி : பொங்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆகும். ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிக்கவும் கம்பீரத்தை பிரதிபலிப்பதில் சலங்கை முக்கியமானதாக உள்ளது. காளை வளர்ப்போர் அவர்களது விருப்பப்படி பல்வேறு வகையான ஜல்லிக்கட்டு சலங்கைகளை வாங்கி தங்களது வளர்ப்பு மாடுகளுக்கு அணிந்து அழகு பார்த்து வருகின்றனர்.
சிங்கம்புணரி பகுதியில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் பல ஆண்டுகளாக சலங்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் தயாரிக்கப்படும் சலங்கைகள் உறுதி மற்றும் கலைநயம் மிக்கவும், புகழ் பெற்றவையாக உள்ளது. இதனால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து மாடு ஆர்வலர்களும் விற்பனையாளர்களும் இங்கு அதிகளவில் மணி தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்து வருகின்றனர்.
மார்கழி மாதம் முதல் சித்திரை மாதம் வரை சலங்கை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறும். இங்கு தயாரிக்கப்படும் வெங்கல மணி பித்தளை மணி மற்றும் சில்வர் ஆகியவற்றில் ஆன மணிகள் 4 பல், 6 பல், 8 பல் என அளவுகளிலும், நாக்கு மணி, வாழக்காய் மணி என பல்வேறு வகையான மணிகளை தோலாலான பெல்ட்டுகளில் அழகாக கோர்க்கப்பட்டு குஞ்சங்கள் வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இந்த குஞ்சங்கள் பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிக் கலர்கள், சமுதாய கலர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப பல்வேறு கலர்களில் செய்யப்பட்டு மணிகளுடன் கோர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இப்பகுதி மணிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். சிறிய கன்றுகள் என்றால் ஆறு மணியும் பெரிய மாடுகளுக்கு 12 மணி வரை மணிகள் செய்யப்பட்டு 1,800 ரூபாய் முதல் 8ஆயிரம் ரூபாய் வரை அதன் தரத்திற்கு ஏற்றார்போல் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து மணி தயாரிப்பாளர்கள் கூறும்போது, சிங்கம்புணரியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மணி தயாரிக்கும் பணியில் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகிறோம். மார்கழி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மணிகள் செய்வதற்கு ஆர்டர்கள் அதிக அளவில் வருகிறது. கோயில் மாடுகள், வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் ஆகியவற்றிற்கு கலை நயத்துடன் மணிகள் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் சலங்கைகளை புது சலங்கைகளை வாங்குவதும் பழைய சலங்கை மணிகளை புதுப்பிப்பதும் நடைபெற்று வருகிறது. இதனால் நல்ல வருமானம் உள்ளது என்றார்.
தற்போது நூல் கயிறுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அக்கயிறுகளில் மாடுகளுக்கு மூக்கு கயிறுகளில் அழகிய வேலைப்பாடுகள் செய்வதற்கும் மாடு கட்டும் கயிறுகளிலும் அழகிய குஞ்சங்கள் வைத்து வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கடைகளிலும் ரெடிமேட் மணிகள் கயிறு குஞ்சங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை குறைவு என்றாலும் சிங்கம்புணரியில் தயாரிக்கப்படும் மணிகள் உழைப்பு மிகுந்தவையாக உள்ளது. இதனால் கடைகளில் வாங்குவதை விட இங்கு செய்து கொடுக்கும் மணிக்கு மவுசு அதிகம்.