சென்னை: சிந்தாதிரிப்பேட்டை பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த முதியவர் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். சிந்தாதிரிப்பேட்டை காந்தி இர்வின் சாலை அருகே உள்ள கூவம் ஆற்று பாலத்தில் நேற்று மாலை, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பாலத்தின் மீது ஏறி, கூவம் ஆற்றில் குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூவம் ஆற்றில் குதித்த நபரை தேடினர். ஆனால், அவர் சேற்றில் சிக்கி மாயமானது தெரியவந்தது.
உடனே போலீசார் எழும்பூர் தீயணைப்பு வீரர்களை வரவழைத்து, கூவம் ஆற்றில் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் உடலை மீட்க முடியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நபர் யார் என சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். சடலத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.