சென்னை: நீலாங்கரையில் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தீப்பிடிக்கும் ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் தண்ணீருக்கு பதிலாக பெட்ேரால் ஊற்றியதால் குபீரென தீப்பிடித்து பள்ளி மாணவன், கராத்தே மாஸ்டர் காயம் அடைந்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக்கழகம் புறநகர் மாவட்ட தலைவர் இசிஆர் சரவணன் காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், கராத்தே சாகச நிகழ்ச்சியாக, தீப்பற்ற வைத்து ஓடு உடைக்கும் நிகழ்ச்சியில் மயிலாப்பூரை சேர்ந்த பள்ளி மாணவன் கிரிஷ்வா (11) ஈடுபட்டுள்ளார். அப்போது, ஓட்டை உடைத்ததும் மாணவனின் கையில் தீ பற்றிக் கொண்டது. அதை உதறி உதறி அணைக்க அவர் முயலும்போது, கராத்தே மாஸ்டர் ராஜன் (32) தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருப்பது தண்ணீர் என நினைத்து ஊற்றி விட்டார். ஆனால் அது பெட்ரோல்.. அதை ஊற்றியதும் ‘பக்’கென தீப்பிடித்து சிதறியது. மாணவன் அலறித் துடித்தார். இதில் மாணவனுக்கும் மாஸ்டருக்கும் கையில் தீப்பற்றியது.
இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு போலீசாரின் அனுமதி பெறாமல் சாகச நிகழ்ச்சி நடத்தியதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் காயமடைந்த மாணவன் கிரிஷ்வா, மாஸ்டர் ராஜனை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று இருவரும் வீடு திரும்பினர். இதுபற்றிய தகவலறிந்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி சிறுவன் கூறுகையில், ‘ஐ வில் கம் ேபக்’ சாகசத்தில் இதெல்லாம் சகஜம் என தெரிவித்துள்ளார்.