சில்லிபாயின்ட்…

* முதல் வெற்றி
ஆப்கானிஸ்தான்-தென் ஆப்ரிக்கா இடையிலான ஒருநாள் பகல்/இரவு தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. அதன் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய தெ.ஆ 33.3ஓவரில் 106ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 50ஓவரில் 107ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கான் களமிறங்கியது. அந்த அணி 26ஓவரில் 4விக்கெட் மட்டும் இழந்து 107ரன் எடுத்தது.

அதனால் ஆப்கான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதுவரை ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் மட்டுமே 2முறை இந்த அணிகள் மோதியுள்ளன. அந்த 2லும் தெ.ஆ தான் வெற்றி பெற்றிருந்தது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான முதல் தொடரின் முதல் ஆட்டத்தில் தெ.ஆவுக்கு எதிராக ஆப்கான் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

* நியூசி நிதான ஆட்டம்
இலங்கை-நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் காலேவில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 302ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து 2வது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை மேலும் 3 ரன் சேர்த்து 305ரன்னுககு ஆட்டமிழந்தது. நியூசி வீரர் வில்லியம் 5விக்கெட் அள்ளினார்.

அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசி நேற்று 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 250ரன் எடுத்திருந்தது. அணியில் டாம் லாதம் 70, கேன் வில்லியம்சன் 55, ரச்சின் ரவீந்திரா 39ரன் எடுத்தனர். களத்தில் உள்ள நியூசி வீரர்கள் டாரியல் மிட்செல் 40, டாம் பிளெண்டல் 15 ரன்னுடன் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.

* துலீப் கோப்பை கிரிக்கெட்
துலீப் கோப்பை 4நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நேற்று தொடங்கின. முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பி பந்து வீச்ைச தேர்வு செய்யதது. அதனால் முதலில் களம் கண்ட இந்தியா டி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 306ரன் எடுத்திருந்தது. அணியில் தேவதூத் 30, ஸ்ரீகர் 52, ரிக்கி 56, சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 89ரன் என 4 வீரர்கள் அரை சதம் விளாசினர். பி அணியின் ராகுல் சாகர் 3 விக்கெட் எடுத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியா ஏ, சி அணிகள் மோதின. முதலில் களம் கண்ட ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 224ரன் எடுத்தது. அந்த அணியில் சதம் விளாசிய சாஸ்வத் ராவத் 122ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். சி அணியின் அன்சுங் 3, வியாசக் 2 விக்கெட் வாரினர்.

* புரோ கபடி அட்டவணை
புரோ கபடி போட்டியின் 11வது தொடர் லீக் ஆட்டங்கள் இந்த முறை ஐதராபாத், நொய்டா, புனே நகரங்களில் மட்டும் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் அக்.18ம் தேதி தொடங்கும் சீசனின் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைடன்ஸ்-பெங்களூர் புல்ஸ் அணிகளும், 2வது ஆட்டத்தில் தபாங் டெல்லி-யு மும்பா அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் தனது முதல் ஆட்டத்தில் அக்.19ம் தேதி தெலுங்கு டைடன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதே நாளில் நடப்பு சாம்பியன் புனேரி பல்தன் தன் முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலரை சந்திக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மொத்தம் 132லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. லீக் சுற்று டிச.24ம் தேதி முடிகிறது. புனேவில் நடைபெறும் கடைசி நாள் லீக் ஆட்டங்களில் பெங்களூர் புல்ஸ்-யுபி யோதாஸ், பெங்கால் வாரியர்ஸ்-யு மும்பா அணிகள் களம் காணுகின்றன.

* லெஜண்ட் லீக் கிரிக்கெட்
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட் லீக் டி20 கிரிக்கெட்’ போட்டியின் 2வது தொடர் இன்று தொடங்குகிறது. ஜோத்பூர், சூரத், ஜம்மு, ஸ்ரீநகர் என 4 நகரங்களில் நடைபெறும் இந்தப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் களம் காணுகின்றன. இன்று ஜோத்பூரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் கேஎஸ் ஒடிஷா-மணிபால் டைகர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவை தவிர இந்தியா கேபிடல்ஸ், டோயம் ஐதராபாத், குஜராத் கிரேட்ஸ், சதர்ன் சூப்பர் ஸ்டார்கள் அணிகள் களம் இறங்குகின்றன.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு