Sunday, September 8, 2024
Home » சில்லரை கட்சிக்கு நோ ஆன்சர்: அடுப்பே பத்த வைக்கல… அதுக்குள்ள சுடுதா? அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர்

சில்லரை கட்சிக்கு நோ ஆன்சர்: அடுப்பே பத்த வைக்கல… அதுக்குள்ள சுடுதா? அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர்

by Karthik Yash

கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களிடம் ‘‘கோவையில் 3 டிகிரி வெப்பம் அதிகமாகியுள்ளது என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே?’’ என்று கேட்டபோது பதில் அளித்த டிஆர்பி ராஜா, ‘‘இன்னும் அடுப்பே பத்த வைக்கவில்லை.அதுக்குள்ளே சுடுதுனு சொன்னா என்ற பண்றது’’ என்றார். திமுக தேர்தல் அறிக்கையை அண்ணாமலை விமர்சித்து இருக்கிறாரே? என்று கேட்டபோது, ‘‘அதிமுக என்ன சொன்னது. எங்கள் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அது குறித்த கேள்விகளை மட்டும் கேட்கவும். சில்லரை கட்சிகள் சொல்வதெற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’’ என்றார். ‘‘ஒரு பைசாகூட கொடுக்கமாட்டேன் என அண்ணாமலை கூறியிருக்கிறாரே?’’ என்று கேட்டபோது, ‘‘தேர்தல் கமிஷன் தேர்தலில் வேட்பாளர்கள் செலவழிக்க ஒரு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தில் நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நான்கு பேர் வந்தால் டீ, காபி வாங்கி கொடுக்கணும். எதிர்கட்சி தலைவர்கூட இத சொல்லியிருக்கிறார். எங்களுக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தல் பணிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு டீ,காபி செலவு இருக்கும். எதிரில் அவருக்கு யாரும் வருவதில்லை. அதனால் செலவு இல்லை என நினைக்கிறேன்’’ என்றார். ‘‘உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்து அரசியல் பண்ணுகிறார். ஸ்கிரிப்டை மாற்ற வேண்டும்’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது பற்றி கேட்டபோது அமைச்சர் கூறியதாவது: எங்களை திசை திருப்புவதற்காகவே இதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. எங்கள் எதிரியாக அதிமுக களத்தில் நிற்கிறது. கோவையில் திமுக மகத்தான வெற்றி பெறுவோம்’’ என்றார்.

* அப்பா தாத்தா சீட்டை மகள் பேரன் சீட்டை: பறித்தார்
1977ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜனதா கட்சியின் அங்கமாக இருந்தது குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி (கா.கா.தே.கா.). அந்த தேர்தலில் ரிஷிவந்தியம் (இப்போது திருக்கோவிலூர்) சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஜனசங்கம் சார்பில் களம் இறங்கினார் திருக்கோவிலூர் சுந்தரம். தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று பணியாற்றி கொண்டிருந்தவருக்கு, தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்க நெருங்க… இடியாய் விழுந்தது ஒரு செய்தி. அதாவது… ஜனதா சார்பில் களமிறங்கிய திருக்கோவிலூர் சுந்தரத்துக்கு பதில், கா.கா.தே.கா கட்சியின் வேட்பாளரை களமிறக்க வேண்டுமென்று அடம்பிடித்து வேட்பாளரை மாற்றினார் குமரி அனந்தன். ஆர்.எஸ்.எஸ். வளர்ப்பான திருக்கோவிலூர் சுந்தரமோ விட்டுக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு அதே போன்றதொரு நிகழ்வு இந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நடந்திருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடனே, தென் சென்னையில் வேலை பார்க்க ஆரம்பித்தார் பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. தொகுதியில் பல்வேறு நலதிட்டங்கள், கட்சிக்கு ஆட்களை இணைத்தது… பூத், மண்டல பொறுப்பாளர்களை நியமித்தது என கட்சி வேலைகளும்… கொரோனா, வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் வேலை செய்தது என்று தொடர்ந்து பணியாற்றி வந்த சூர்யாவுக்குதான் தென் சென்னை என உறுதியாகியிருந்தது. இங்கு முன்பே நாம் நிற்பது தெரிந்துவிட்டால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பி.எல்.சந்தோஷ் மூலமாக சூர்யா முட்டுக்கட்டை போட்டுவிடுவார் என அஞ்சிய தமிழிசை, தேர்தல் தேதி அறிவித்த உடன் பிரதமர் மோடி மூலமாக காய் நகர்த்தி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க ஓரளவு ஓட்டு வாங்கும் தொகுதிகளில் தென்சென்னையும் ஒன்று. எனவே, தமிழிசை கேட்ட கன்னியாகுமரி, தென் சென்னை ஆகிய தொகுதிகளில் தென் சென்னையில் நின்றால் எளிதில் டெபாசிட் வாங்கலாம் என கணக்கு போட்டு இறங்கியிருக்கிறார் தமிழிசை. இதில் எவ்வளவு ஓட்டு வாங்குகிறார் என்பது ஜூன்-4 ல் தெரிந்துவிடும். தென்சென்னையை பறிகொடுத்த எஸ்.ஜி.சூர்யாவின் தாத்தாதான் திருக்கோவிலூர் சுந்தரம். அப்போது தாத்தாவின் வாய்ப்பை பறித்தவரின் மகள் தன் வாய்ப்பையும் பறித்து விட்டாரே என்று எஸ்.ஜி சூர்யா புலம்பி வருகிறாராம்.

* ப்பா… என்ன மூளை… என்ன மூளை… குழந்தைக்கு கூட தெரியும்… இந்த ஐபிஎஸ்சுக்கு தெரியலயே…
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வாய்க்கு வந்தபடி பேசி சர்ச்சைகளில் சிக்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திமுகவுக்கு நாங்கள்தான் போட்டி என்ற மனக்கோட்டை கட்டிக்கொண்டு நாளுக்கொரு கதைகளை அவிழ்த்து விட்டுக் வருகிறார். ‘‘களம் மாறிப்போச்சுண்ணே…’’ என்று கூறிக்கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வெற்றிகளை குவிக்கும் என நினைத்து பேசி வருகிறார். தற்போது கோவை தொகுதி வேட்பாளராகவும் மாறிவிட்டதால், திராவிட கட்சிகளுக்கு எதிராக பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஒரு அறிவு ஜீவிபோல நேற்று முன்தினம் அவர் பேசியது கேலியாக்கப்பட்டு வருகிறது. கோவையில் அவர் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘கோவையில் என்ன அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கு?… ஊரு சூடானதுதான் மிச்சம்… குளுமையாக அமைதியாக இருக்கக்கூடிய ஊரு இது.

இன்னைக்கி 2 டிகிரி 3 டிகிரி வெப்பநிலையை ஏற்றியிருக்காங்க… ஒரு டூவீலரில இந்த ஊருல போக முடியுமாண்ணே… மாஸ்க் போடாம மூச்சுல ஒரு துகள் கலக்காம போக முடியுமாண்ணே… ஒரு ஆரோக்கியமாக சாலை இங்கே இருக்காண்ணே… நல்ல ஒரு பார்க் இருக்காண்ணே… குழந்தைகளை கூட்டிட்டு நடந்து போக முடியுமாண்ணே… என்ன செஞ்சிருக்காங்க… எத வளர்ச்சிங்கிறாங்க…’’ என்று புலம்பியிருக்கிறார். தான் பெரிய அறிவுஜீவி என நினைத்துக்கொண்டு பேசிய அந்த பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் வைச்சு செய்து வருகின்றனர். ‘‘ஆயா சுட்ட வடையை ஏன் காக்கா தூக்கிட்டு போச்சு? ஏன் பீர் குடிச்சா தொப்ப போடுது?’’ என பல கிண்டலான கேள்விகளை கேட்டு… காரணம் திராவிட கட்சிகள் என அண்ணாமலை சொல்வதுபோல மீம்ஸ் வீடியோ தயார் செய்து பதிவிட்டுள்ளார்கள். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

14 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi