Monday, September 9, 2024
Home » எஸ்.ஐயை வெட்டிவிட்டு தப்பியபோது என்கவுன்டர் பிரபல ரவுடி சுட்டு கொலை: புதுக்கோட்டை அருகே பரபரப்பு

எஸ்.ஐயை வெட்டிவிட்டு தப்பியபோது என்கவுன்டர் பிரபல ரவுடி சுட்டு கொலை: புதுக்கோட்டை அருகே பரபரப்பு

by Karthik Yash

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தைல மரக்காட்டிற்குள் பதுங்கியிருந்த பிரபல ரவுடி போலீசாரால் என்கவுன் டரில் சுட்டு கொல்லப்பட்டார். திருச்சி எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் துரை (எ) துரைசாமி (42). திருமணமாகாதவர். திருச்சியில் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கோவை, நாமக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, பெட்ரோல் திருட்டு உள்ளிட்ட 70 வழக்குகள் உள்ளன. இதில் திருச்சியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன.

இதில் 4 கொலை வழக்கில் ஒன்றில் விடுதலையும், 3 வழக்குகள் நிலுவையிலும் உள்ளன. புதுக்கோட்டையில் ஒரு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடியாணை இருந்துள்ளது. இவரை புதுக்கோட்டை போலீசார் தேடி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம்- வம்பன் பகுதிக்கு இடையே உள்ள தைலமரக்காட்டிற்குள் அவர் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து ஆலங்குடி இன்ஸ்பெக்டர் முத்தையா மற்றும் எஸ்ஐ மகாலிங்கம் ஆகிய இருவரும் நேற்று மதியம் தைல மரக்காட்டிற்குள் சென்று தேடினர். அங்கு ரவுடி துரை பதுங்கி இருந்ததை கண்ட போலீசார், அவரை பிடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அவர் கத்தியால் எஸ்ஐ மகாலிங்கத்தை குத்தியுள்ளார். இதில் அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்து சுதாரித்த இன்ஸ்பெக்டர் முத்தையா, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சரணடையும் படி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் ரவுடி துரை, மீண்டும் எஸ்ஐயை வெட்ட முயற்சித்ததால் இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் ரவுடி துரையின் கால் மற்றும் மார்பு பகுதியில் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ரவுடி துரை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் உடல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எஸ்ஐ மகாலிங்கம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து திருச்சி சரக டிஐஜி மனோகரன், புதுக்கோட்டை எஸ்பி வந்திதாபாண்டே ஆகியோர் சம்பவம் நடந்த தைலமரக்காட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். சம்பவம் நடந்த தைல மரக்காடு மற்றும் ஆலங்குடி ரோடு ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் துரை உடல் வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* போலீசாரால் ஏற்கனவே சுடப்பட்ட ரவுடி துரை
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில் திருச்சி உய்யக்கொண்டான் கரையில் ரவுடி துரையை விரட்டி பிடிக்க முயன்ற போது தப்பியோடியதால் அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தின்போது இவரது தம்பி சோமசுந்தரமும் காலில் சுடப்பட்டு பிடிக்கப்பட்டார். அவர் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

9 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi