சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 21ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தகவல்

சென்னை: சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் 21ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பணிகளில் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரம் கடந்த மார்ச் 24ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை (ஞாயிறு நீங்கலாக) சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிக்கான காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

Related posts

கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார்; நடிகர் நிவின் பாலியிடம் போலீசார் விசாரணை

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

திருப்பதி கோயில் லட்டு கலப்பட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு வரும் வரை சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்