தண்டரை ஊராட்சியில் ரூ.8 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை: செய்யூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

செய்யூர்: தண்டரை ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஒன்றியம், தண்டரை ஊராட்சிக்குட்பட்ட பொய்கைநல்லூர் கிராமத்தில் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த, நியாய விலைக்கடை கட்டிடம் கட்டி பல வருடங்களானதால், இக்கட்டிடம் முழுவதும் பழுதாகி காணப்பட்டது.

மேலும், மழை காலங்களின்போது, மழைநீர் கசிவால் ரேஷன் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து வந்தது.எனவே, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அதே பகுதியில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபுவிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இக்கோரிக்கையின்படி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், புதிய நியாய விலைக்கடை கட்டிடம் கட்டுவதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய நியாய விலைக்கடை கட்டும் பணி தொடங்கப்பட்டு, சில நாட்களுக்கு முன் அப்பணி நிறைவு பெற்றதையடுத்து, அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி முனுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தலைமை தாங்கி, ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, அதே ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் ஏமாநாதன், ராமமூர்த்தி, மணி, சுந்தரமூர்த்தி, ஆண்ட்ரூஸ், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பெண் ஆசிரியைகளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக பயிற்சியாளரை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

முனீஸ்வரர் கோயிலில் நகை, பணம் திருட்டு