செய்யாறு: செய்யாறு அருகே இன்று திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்த நிலையில், அழைப்பிதழ் கொடுக்க காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் காணாமல் போனதாக புகாரின்பேரில், அவர் கடத்தப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உறவினர் மகனுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் செய்யாறில் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில் இளம்பெண் கடந்த 4ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள தனது தோழிகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மகளை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை செய்யாறு போலீசில் நேற்று முன்தினம் மாலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மணப்பெண்ணை யாராவது கடத்திச் சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகின்றனர்.