திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 மதரசா ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பெரும்படப்பு பகுதியில் ஒரு மதரசா (அரபிப் பாடசாலை) உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரபிப் பாடசாலையில் மலப்புரம் பாலப்பெட்டி பகுதியை சேர்ந்த குஞ்சகமது (64), முகமதுண்ணி (67) மற்றும் பாலக்காட்டை சேர்ந்த ஐதுரூஸ் (50) ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர்கள் 3 பேரும் மதரசாவில் படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையறிந்த வெளியங்கோடு பகுதியை சேர்ந்த பாவா (54) என்பவரும் இந்த கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த மதரசா பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் ஒரு கவுன்சலிங் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாணவிகளில் சிலர், ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை கூறி அழுதுள்ளனர். இதுதொடர்பாக குழந்தைகள் நல அமைப்பினர் பெரும்படப்பு போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மதரசா ஆசிரியர்கள் 3 பேர் மற்றும் பாவா ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்களை போலீசார் பொன்னானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.