தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை சாஸ்திரிநகர் 3வது தெருவை சேர்ந்தவர் கொண்டன்சாமி (61). இவரது வீட்டில் 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி தனியாக இருந்தார். அங்கு வந்த கொண்டன்சாமி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறி சிறுமி அழுதார். பின்னர் சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டன்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை நீதிபதி விசாரித்து, முதியவர் கொண்டன்சாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.