Thursday, September 19, 2024
Home » செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கூடுதலாக மேம்பாலம் கட்ட வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கூடுதலாக மேம்பாலம் கட்ட வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

by MuthuKumar

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாறு மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கூடுதலாக மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகில் உள்ள செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. சுமார் 1 கிமீ தூரம் உள்ள இந்த மேம்பாலத்தின் வழியாக செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் சென்று வருகின்றன. மேலும், புஞ்சை அரசன்தாங்கல், அப்துல்லாபுரம், நத்தக்கொல்லை, பல்லாவரம், அய்யங்கார்குளம், வெம்பாக்கம், கோளிவாக்கம் கூழமந்தல், ஆக்கூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நெசவாளர்கள் ஆகிய அனைவரும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கும் காஞ்சிபுரத்தை நம்பியே உள்ளதால் அதிக அளவில் டூவீலர்களில் வந்து செல்கின்றனர்.

மேலும், காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மாங்கால் கூட்டு சாலையில் சிப்காட் அமைந்துள்ளது. இங்கு எண்ணற்ற பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் அதிக அளவில் இந்த மேம்பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இதனால், பாலாற்று பாலத்தில் இருந்து கீழம்பி வரையில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புறவழிச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள், கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைக்கு செல்லும் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த மேம்பாலத்தின் வழியாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதாகி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த மேம்பாலத்தையொட்டி ஏற்கனவே இருந்த தரைப்பாலம் கீழம்பி புறவழிச்சாலையை இணைக்க பயன்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாக வந்தவாசி, செய்யாறு உள்பட பல பகுதிகளில் இருந்து வேலூர், பெங்களூரு, பெரும்புதூர், சென்னை செல்லும் கார், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் அதிகளவில் சென்று வந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெருமழை மற்றும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன.

அதிக அளவிலான எம்-சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள், தொழிற்சாலைகளின் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் இந்த வழியாக காஞ்சிபுரத்திற்கு செல்லும் பள்ளி மாணவர்கள், அலுவலக வேலைக்குச் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, புழக்கத்தில் இருக்கும் மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு இருந்த தரைப்பாலம் புறவழிச்சாலையை இணைக்கும் இணைப்புச் சாலையாக இருந்தது. இந்த சாலை 2 முறை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த தரைப்பாலம் ஏறக்குறைய முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், பாலாறு மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, காஞ்சிபுரம் அருகே புறவழிச்சாலையுடன் இணைக்க பாலாற்றில் மீண்டும் தரைப்பாலம் அமைத்து மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புறவழிச்சாலையுடன் இணைக்க வேண்டும்
இந்த மேம்பாலத்தையொட்டி ஏற்கனவே இருந்த தரைப்பாலம் கீழம்பி புறவழிச்சாலையை இணைக்க பயன்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாக வந்தவாசி, செய்யாறு உள்பட பல பகுதிகளில் இருந்து வேலூர், பெங்களூரு, பெரும்புதூர், சென்னை செல்லும் கார், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் அதிகளவில் சென்று வந்தன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெருமழை மற்றும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தின் வழியாக செல்கின்றன. அதிக அளவிலான எம்-சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள், தொழிற்சாலைகளின் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், மேம்பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் விபத்துகள்
இந்த மாதத்தில் முன்னால் சென்ற கனரக லாரியின்மீது மற்றொரு கனரக லாரி மோதி விபத்து, நெல்மூட்டை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றது, கார் பஞ்சராகி நின்றது என 3 சம்பவங்களால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலத்தில் இருந்து அய்யங்கார்குளம் கூட்டுச்சாலை வரையும், மற்றொரு புறத்தில் செவிலிமேடு சந்திப்பு வரை என சுமார் 5 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

எனவே, மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப செவிலிமேடு பாலாற்றில் கூடுதலாக புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பாலாறு மேம்பாலத்தை தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இந்நிலையில், விபத்துக்கள் தொடர் கதையாக வருவதால் தேவைக்கேற்ற 4 வாகனங்கள் சென்று வரும் வகையிலோ அல்லது புதிதாக மேலும் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi