இதில், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. நீளத்திற்கு 28 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 19 உயர்மட்ட நிலையங்களுக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி போன்ற பன்னாட்டு நிதியுதவி நிறுவனங்களால் நிதி அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் வழித்தடம் 3ல் கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி வழித்தடம் 3ல் கடந்தாண்டு செப்.9ம் தேதி சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 703மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை தற்போது வந்தடைந்துவிட்டது.
இதில் கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டர் ஆழத்தில் 51 மீட்டர் நீளத்தை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், டோனி புர்செல் (அணி தலைவர் – பொது ஆலோசகர்கள்), லத்தீப் கான் (தலைமை தட நிபுணர் – பொது ஆலோசகர்கள்), சஞ்சீவ்குமார் மண்டல் (தலைமை குடியுரிமை பொறியாளர் – பொது ஆலோசகர்கள்), ஜெயராமன் (திட்ட பொறுப்பாளர் – லார்சன் மற்றும் டூப்ரோ) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.