பொன்னேரி: மீஞ்சூர் அருகே 2 கொலை வழக்கில் தலைமறைவாக இருந்துகொண்டு, தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் சரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் மதன்(32). இவர், அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஹரி, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சிவா ஆகியோரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு நந்தியம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர், பொன்னேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் வந்துள்ளார்.
இதனையறிந்த கொலை வழக்கு குற்றவாளியான மதன் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் பறித்துச்சென்றுள்ளார். தொடர்ந்து, நேற்று முன்தினம் நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடந்து வந்த சென்னை மாத்தூரை சேர்ந்த சேகர்(50) என்பவரை கத்தி காட்டி மிரட்டி 1500 ரூபாயை மதன் பறித்துள்ளனர். இதுகுறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கு குற்றவாளியாக இருந்துகொண்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்த குற்றவாளி மதனை நேற்று கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.