டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் பென்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பென்டிரைவில் இந்த ஆவணம் அப்போது இல்லை என்று கூறப்படுகிறதே, இதற்கு அமலாக்கத்துறையின் பதில் என்ன?, சாஃப்ட் பைல் ஆவணம் எங்கிருந்து வந்தது என அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள நிலையில் தனக்கு ஜாமின் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறையில் இருக்கும் ஒருவர் ஜாமின் கேட்பதற்கென்று சில முக்கிய வழிமுறைகள் உள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தை தொடங்கினார். ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன?, செந்தில் பாலாஜி வழக்கில் பென்டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென சேர்க்கப்பட்டது ஏன்? சாஃப்ட் பைல் ஆவணம் எங்கிருந்து வந்தது? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து “பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது” என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர், “நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கத்துறைக்கு பென் டிரைவில் என்ன கருத்துக்கள் இருக்கிறது என்பது பற்றி தெரியாத காரணத்தால் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.