டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையும், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரும் தனித்தனியாக விசாரணை நடத்தலாம் என்ற அனுமதியை வழங்கி இருந்தனர்.
இதனிடையே, வழக்கு தொடர்பாக 2 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இல்லையென்றால் தாங்களாகவே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க நேரிடும் என்ற விஷயத்தையும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் தொடர்ச்சியாக, அமலாக்கதுறை தற்போது செந்தில் பாலாஜியை கைது செய்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது சரியானதா? தவறானதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களது விசாரணையை மேலும் நடத்துவதற்கு கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.