Thursday, September 26, 2024
Home » அமலாக்கத்துறையால் ஓராண்டுக்கு முன் கைது; செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அமலாக்கத்துறையால் ஓராண்டுக்கு முன் கைது; செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

by Neethimaan

* கடந்த 2023 ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

* இது நாள் வரை அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார். செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் உட்பட மொத்தம் 47 பேர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக உள்ளனர். இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களை செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலைத்துவிடுவார் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ராம்சங்கர்,\” செந்தில் பாலாஜி விவகாரத்தில் அவர் மீது பதியப்பட்டுள்ள ஒரு வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்படுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும்.

குறிப்பாக செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டத்திற்கு புறம்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை கூட செய்து கொண்டார். தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தான் தொடர்ந்து சிறையிலும் அடைக்கப்பட்டு இருக்கிறார். முகாந்திரமே இல்லாத இந்த வழக்கில் என்ன தான் அமலாக்கத்துறை தரப்பில் விசாரிக்கிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை. மேலும் எப்போது விசாரணை முடியும் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சமாக இருக்கிறது.

எனவே செந்தில் பாலாஜியின் உடல்நிலயை நீதிமன்றம் கருத்தில் கொண்டு இந்த வழக்கிலிருந்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து வாதங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை கூறியபடி செந்தில் பாலாஜி மீதான வழக்கை தனித்தனியாக விசாரிக்க முடியாது என்று தெரிவித்ததோடு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 20ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

You may also like

Leave a Comment

fourteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi