செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார உள்ள கிராம பகுதிகளில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. இதனால், விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர். கனமழை காரணமாக சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள வடகால் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சாமந்தி மற்றும் மல்லிகை செடிகள், நெற் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து பயிர்கள் நாசமானது. அதனால் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்து கொஞ்சம் கொஞ்மாக அழுகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. விவசாயிகள் வயல்வெளிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் வடகால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறு மழைக்கே விவசாய பகுதிகளில் மழைநீரானது நிரம்பி விடுகிறது. அடுத்தடுத்து வருகிற மழைகாலங்களில் மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டால். விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.