சென்னை: புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தை நேற்று சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த முதற்கட்ட ஆன்மிகப் பயணத்தில் 40 பக்தர்கள் பங்கேற்றனர். இந்த குழுவினருக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை, நித்திய கல்யாண பெருமாள் கோயில், மகாபலிபுரம், ஸ்தல சயன பெருமாள் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோயில் பிரசாதம் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஒரு வேளை அன்னதானம் நாள் முழுவதும் 750 கோயில்களில் நடந்து வருகிறது. இது குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் என்கின்ற திட்டத்தின் கீழ் 26 அர்ச்சகர்கள் அனைத்து கோயிலிலும் முழு சுதந்திரத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் என்கின்ற நிலையிலிருந்த அச்சகர்கள் இன்று கை நிறைய வருமானம் வாங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரக்கூடிய பொய்யான கருத்துகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை என்றும் அஞ்சாது. மிகவும் தரமான அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதன் காரணத்தால்தான் முருகன் மாநாடு சிறப்புற நடைபெற்றது.