மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடுகளுக்கு கட்டணமின்றி ஆண்டிற்கு 5 முறை ஆன்மிக சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆணையர் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற 2,646 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, 10 பேருக்கு ரூ.1,000க்கான காசோலை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, முருக பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய தலங்களை பக்தர்கள் தரிசனம் செய்திடும் வகையில் ஆன்மிக சுற்றுலா குறித்த ஆலோசனை கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆறு திருக்கோயில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பேரை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வரும் 28ம் தேதி தொடங்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தை இன்று முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.

அறநிலையத்துறை சார்பில், ஏற்கனவே மானசரோவர், முக்திநாத் மற்றும் ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணங்கள் செயல்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சத்தை மானியமாக வழங்கியுள்ளது.

பணிசுமை அதிகம் இல்லாத கோயில்களின் அலுவலர்கள் சிறப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோயில்களிலும் தைப்பூசத்திற்கு சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு