பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திட சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆறு திருக்கோயில்களுக்கும் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பேரை ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட அறநிலையத்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக சுற்றுப்பயணம் வரும் 28ம் தேதி தொடங்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தை இன்று முதல் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய 200 விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட பயணத்தில் அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்த ஆன்மிக பயணங்களில் அழைத்து செல்ல முன்னுரிமை வழங்கப்படும்.
அறநிலையத்துறை சார்பில், ஏற்கனவே மானசரோவர், முக்திநாத் மற்றும் ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணங்கள் செயல்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். ராமேசுவரம் – காசி ஆன்மிக பயணத்திற்கு இந்தாண்டு 300 பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.75 லட்சத்தை மானியமாக வழங்கியுள்ளது.
பணிசுமை அதிகம் இல்லாத கோயில்களின் அலுவலர்கள் சிறப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறுபடை வீடு கோயில்களிலும் தைப்பூசத்திற்கு சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.