புதுடெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார்.
471 நாட்கள் சிறை வாழ்க்கை
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த் நிலையில், நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 20ம் தேதி ஒத்திவைத்தனர்.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் நீதிபதிகள் அபஸ்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்தனர். 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் என்னென்ன ?
*ரூ.25 லட்சத்திற்கு இருநபர் உத்திரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு
*திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்
*சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது