பெரம்பூர்: செம்பியம் சுற்று வட்டார பகுதிகளில் 430 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை செம்பியம், திருவிக நகர் உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வெங்கட்ராமன் தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கடையில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கடையில் இருந்து 230 பாக்கெட் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இதுதொடர்பாக, பெரம்பூர் பரமசிவன் தெரு பகுதியைச் சேர்ந்த பாபு (27) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோன்று திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தீட்டி தோட்டம் 5வது தெருவில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படை போலீசார் குறிப்பிட்ட அந்தக் கடையில் சோதனை செய்தனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையிலிருந்து 200 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பெரம்பூர் திருவிக நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.