மதுரை மாவட்டம், விளாங்குடி அருகே கோவில்பாப்பாகுடி கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: பல்லடம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பேசி உள்ளார். இவ்வாறு புகழ்வதால் தமிழக மக்கள் அவரை நல்லவர் என நம்பி வாக்களித்து விடுவார்கள் என நினைத்துப் பேசுகிறார்.
கேப்பையில் நெய் வடிவதாக கூறினால் கேட்பாருக்கு புத்தி எங்கே போனது? தமிழக மக்கள் மறந்தும் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் பாராட்டிய மோடி, எடப்பாடியை பாராட்டவில்லை. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி பாஜவுக்கு வாக்கு வாங்கி விட வேண்டும் என்று மோடி நினைக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எத்தனுக்கு எத்தன்கள்; வில்லாதி வில்லன்கள். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள். பாஜ ஒரு மதவாத இயக்கம். மதம், சாதியைச் சொல்லி மக்களை பிரிக்கின்ற பாஜவை, தமிழ்நாட்டில் நுழையவே விடக்கூடாது.