வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போலி பிராண்டட் செல்போன்கள் விற்பனை


திருப்பூர்: பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் 20க்கும் மேற்பட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த மாநிலங்களை காட்டிலும் அதிக சம்பளம், எப்போதும் வேலை என்ற காரணத்தால் குடும்பத்துடன் குடிபெயர்ந்து திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை திருப்பூரின் புது மார்க்கெட், அனுப்பர்பாளையம், காதர் பேட்டை, பழைய மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக சந்தைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வர். வடமாநில தொழிலாளர்களின் வருகையை குறிவைத்து ஏராளமான வணிகர்கள் சாலையோர கடைகளையும் அமைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

இதுபோன்று வரும் வடமாநில தொழிலாளர்களிடம் ஒரு சிலர் தங்களிடம் விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பதாகவும், அவசர தேவை காரணமாக குறைந்த விலைக்கு விற்பதாக கூறி ரூ.20 மதிப்புள்ள போன்களை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் தருவதாகவும் கூறி விற்பனை செய்து வருகின்றனர். வெளியில் பிராண்டட் மொபைல் போன்போல இருந்தாலும் உள்ளே விலை குறைவான அல்லது போலியான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. கேமராக்கள் இருக்க வேண்டிய இடத்தில் கண்ணாடிகளை வைத்தும், விலை குறைந்த கேமரா லென்ஸ்களை வைத்தும் போலியாக தயாரித்து பிராண்டட் மொபைல் என்ற பெயரில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பர்பாளையம் அருகே தற்காலிக சந்தையில் இதுபோன்ற செல்போன் வாங்கிய வடமாநில வாலிபர் அதில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்தபோது போலியான உதிரி பாகங்களுடன் செல்போன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. நாடோடி நபர்கள்போல ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் இவர்களிடம் மீண்டும் இதுகுறித்து கேட்க முடியாததால் ஏமாற்றமடைந்த வட மாநில தொழிலாளர்கள் தற்போது புகார் கொடுக்க முடியாமலும், ஏமாந்த பணத்தை திரும்ப பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

Related posts

தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!

தொழிலதிபர் அம்பானி தனது வீட்டு திருமணத்திற்கு செலவு செய்தது மக்களின் பணம்: ராகுல்காந்தி பேச்சு

திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதி மக்களுக்காக 2 சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்: துரை வைகோ