கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கை மாவட்டத்தில் 73 பஞ்சாயத்துகள் தேர்வு: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

செங்கல்பட்டு: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 73 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2024-25ம் நிதியாண்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 73 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாத்தூர், தொழுப்பேடு, பாதிரி, மின்னல்சித்தாமூர், கீழாமூர், மோகல்வாடி, எடையாளம், ஆலப்பாக்கம், பொறங்கால், பொற்பனங்கரணை, அனந்தமங்கலம், ஆத்தூர், ஈசூர், பருக்கல், கொளத்தூர், புளியாணி, நுகும்பல், விளாங்காடு, முகுந்தகிரி, கயப்பாக்கம், பொறையூர், அஞ்சூர், கல்வாய், நெடுங்குன்றம், மண்ணிவாக்கம், வெங்கடமங்கலம், கருநிலம், கீரப்பாக்கம், வெங்கடாபுரம், வீரபோகம், சீக்கினாங்குப்பம், கூவத்தூர், தொண்டமாநல்லூர், நீலமங்கலம், நெமந்தம்,

ஆக்கினாம்பேடு, செம்பூர், ஜமீன் எண்டத்தூர், வீராணகுன்னம், லட்சுமிநாராயணபுரம். கருணாகரச்சேரி, புளியரணங்கோட்டை, அவுரிமேடு, …நெல்லி, பெரியவெண்மணி, மங்களம், சிறுநல்லூர், பாக்கம், ஓணம்பாக்கம், வழுவதூர், நெரும்பூர், மணப்பாக்கம், நல்லாத்தூர், அமிஞ்சிக்கரை, சாலூர், இரும்புலிச்சேரி, திருமணி, வல்லிபுரம். நத்தம்கரியாச்சேரி, மோசிவாக்கம், தண்டலம், சிறுதாவூர், முள்ளிப்பாக்கம், பெரியவிப்பேடு, பெரிய இரும்பேடு, காரணை, கீழூர், குன்னப்பட்டு, திருநிலை, மேலக்கோட்டையூர், அகரம்தென், திருசூலம். மதுரப்பாக்கம், ஆகிய பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தரிசு நிலங்களை பயிர் சாகுபடிக்கு கொண்டுவரும் பொருட்டு 10 முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியாக உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்பாக அமைத்து, பாசன வசதி அமைத்து பலன் தரும் மரப்பயிர் மற்றும் பழமரங்கள் சாகுபடி செய்திடும் பொருட்டு தரிசு நில தொகுப்பில் முட்புதர்களை அகற்றி சமன் செய்து உழுவதற்கு எக்டர் ஒன்றிற்கு 50 சதவீதம் மானியமாக அல்லது அதிகபட்சமாக ரூ.9,600 வரை பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

மேலும், தனிப்பட்ட விவசாயிகளின் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி சமன் செய்து உழுவதற்கு எக்டர் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.9,600 வரை பின்னேற்பு மானியமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு எக்டருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் ரூ.300 மானியமாக வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் உயிரியல் முறையில் நுண்ணூட்ட சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கப்பெற்று உற்பத்தி அதிகரிக்க ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உத்திகள் செயல்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைக்கு தேவையான உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், திரவ உயிர் உரங்கள். தொழு உரம், நுண்ணூட்டக் கலவைகளை பயிர்களுக்கு இடுவதற்கு ஒரு எக்டருக்கு மானியமாக 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.1,500 வழங்கப்படும்.

இக்கிராம பஞ்சாயத்துகளில் விசைத்தெளிப்பான்களுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.3,000 மானியத்தில் வழங்கப்படும். விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களுக்கு தேவையான இனத்தில் உழவன் செயலியில், பதிவு செய்திடவோ அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ தொடர்புகொள்ளலாம். மேலும் தடுப்பணை, கற்பாறை அணை, அமிழ்வு நீர் குட்டைகள், சமுதாய உறிஞ்சு குழி, பரந்த அளவு மரக்கன்றுகள் நடவு, சாலையோர மரங்கள் நடுதல்,

வயலுக்குச் செல்லும் வண்டிப்பாதை, வாய்க்கால்கள் தூர்வாருதல், உளர்களம், பண்ணைக்குட்டைகள், உறை கிணறு, சேமிப்புக்கிடங்கு, தனிநபர் வயலோர வரப்புகள் அமைத்தல் போன்ற ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விபரம் (பட்டா/சிட்டா), ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய விபரங்களுடன் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு