Sunday, June 30, 2024
Home » சேலத்துக்காரர் பலமுறை அழைத்தும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவான மாஜி எம்பி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சேலத்துக்காரர் பலமுறை அழைத்தும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவான மாஜி எம்பி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘இலை ஆட்சியில நடக்காத ஒர்க்குக்கு பில் மட்டுமே போட்டு பையை நிரப்பிக்கிட்ட விஷயம்பற்றி சொல்லுங்கள்’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட ஏரியா இருக்குது. இந்த ஏரியாவுக்கு பக்கத்துல சாத்துன்னு முடியுற ஊராட்சியில, கடந்த இலை ஆட்சியின்போது ஜலஜீவன் ஸ்கீம்ல 2 வாட்டர் டேங்க் கட்டுறதுக்கு டெண்டர் விட்டாங்களாம்… டெண்டரை இலைக் கட்சியோட ஒன்றிய செக்ரட்டரி ஒருத்தர், அவர் பையன் பேர்லயே எடுத்ததாக சொல்லிக்கிறாங்க.. இந்த ஸ்கீம்ல மாவட்டம் முழுவதுமாகவே பல இடங்கள்ல, ஏழு திட்டம் அமல்படுத்துனாங்களாம்.. ஆனா, சாத்துன்னு முடியுற ஊராட்சியில் மட்டும் 2 வாட்டர் டேங்க் கட்டவே இல்லையாம்.

நடக்காத ஒர்க்குக்கு பில் மட்டும் போட்டு தங்கள் பையை நிரப்பிக்கிட்டதா இப்போ பேசிக்கிறாங்க.. இதுல, சம்பந்தப்பட்ட ஆபீசரும் துணையா இருந்திருக்காராம்.. இதனால ஜலஜீவன் ஸ்கீம், கை எட்டியது வாய்க்கு எட்டலயேன்னு ஜனங்க புலம்புறாங்களாம்.. உயர் அதிகாரிங்க விசாரணை குழுவ அமைச்சு, நடவடிக்கை எடுக்கணும்னு குரல் ஒலிக்க தொடங்கி இருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல்ல போட்டிபோடுவதை தவிர்க்க பூட்டு நகர தொகுதி மாஜி எம்பி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துட்டு தலைமறைவாக இருக்கிறாராமே’’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பில் அனைத்து கட்சிகளும் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம்னு தீவிரமாக ஆலோசித்து வர்றாங்க.. பூட்டு நகர தொகுதியில் இலைக்கட்சியின் முன்னாள் எம்பி உதயமானவர். ஒரு குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த இவர், வக்கீலாக இருந்தபோது இலைக்கட்சி தலைவியால் அடையாளம் காட்டப்பட்டு அப்போது எம்பி ஆனார். இப்போது தனது பூர்வீக ஊர்பகுதியில் கல்குவாரி தொழில் செய்கிறார். கடந்த எம்பி தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில் இந்த தொகுதி மாம்பழத்திற்கு ஒதுக்கப்பட்டது. மாம்பழ வேட்பாளர் படுதோல்வி அடைந்தார்.

இதனால, தென் மாவட்டங்களில் முடிந்தவரை குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்துவதில் சேலத்துக்காரர் குறியா இருக்கிறாராம். இந்த சமூகத்தை சேர்ந்த மாஜிக்களை சேலம் தரப்பு தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். பூட்டு நகர எம்பி தொகுதியில் உதயமானவரையே நிறுத்தலாம்னும் முடிவு செய்திருக்காங்களாம். ஆனா, உதயமானவருக்கு உடன்பாடில்லையாம்.. எப்படியும் தோல்விதான் மிஞ்சும். அதோடு பூட்டு மாவட்டத்தில் உள்ள இலைக்கட்சியின் மாஜி மந்திரிகள் இருவரும், தங்களது வாரிசுகளை களமிறக்க தீவிரமாக வேலை பார்த்துட்டு வர்றாங்க.

இந்த சூழலில் போட்டியிடுவது தேவையில்லாத பிரச்னையையே உண்டாக்கும். எதுக்கு பணம், பொருளை இழக்க வேண்டும்னு யோசித்தவர், சேலத்து தரப்பு பலமுறை தொடர்பில் வந்தும் செல்போன் அழைப்பையே எடுக்கவில்லையாம். ஒரு கட்டத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துட்டாராம். தற்போது வீட்டுப்பக்கம் யாரும் வந்து விடுவார்களோ என தலைமறைவாக இருக்கிறதா இலைக்கட்சியினரே பேசி வர்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரு பர்சன்ட் கமிஷன் கொடுத்தா தான் கையெழுத்துன்னு கறார் செய்யும் உதவி கமிஷனர் பற்றி சொல்லுங்க’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் தலா ஒரு உதவி கமிஷனர்கள் பணியில் உள்ளனர். இவர்கள்தான் மண்டல அலுவலகங்களை நிர்வகித்து வர்றாங்க.. அலுவலகத்தில எது நடந்தாலும் முழு பொறுப்பும் இவங்கதான்.. மையப் பகுதி மண்டலத்தில் உள்ள ஒரு உதவி கமிஷனர் வசூலில் படு உச்சத்தில் இருக்கிறாராம்.. தனது மண்டல எல்லைக்குள் எந்த மாதிரியான வளர்ச்சி பணிகள் நடந்தாலும் அதுதொடர்பான பில் இவரது டேபிளுக்கு வரும்போது அதில் ஒரு பர்சன்ட் கமிஷன் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவேன்னு அடம் பிடிக்கிறாராம்… கான்ட்ராக்டர்கள் யாரேனும் மறுத்தால் சம்பந்தப்பட்ட பில்லை நிறுத்தி விடுகிறாராம்..

பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குடிநீர் குழாய், தெருவிளக்கு, மாநகராட்சி பள்ளி கட்டிடம், நகர்நல அலுவலகம் பராமரிப்புன்னு பல வகைகளில் வரும் பில்கள் அனைத்தையும் முடக்கி வைத்து, வரவேண்டிய பர்சன்ட் கரெக்ட்டா வந்த பிறகே பில் பாஸ் செய்கிறாராம். இதுபற்றி யாரேனும் கேள்வி எழுப்பினா, ‘‘நீங்க எங்க வேணா போய், புகார் பண்ணுங்க…’’ என மிரட்டல் வேற விடுகிறாராம்.. இவர், ஏற்கனவே ஒரு மண்டலத்தில் சர்ச்சைக்கு உள்ளாகி, சமீபத்தில் இடம் மாற்றப்பட்டாராம்.. தற்போது, இங்கும் தனது அதிகாரத்தை நிலைநாட்டி வர்றாராம்.. இது, மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்கணும்னு தீவிரமா இருக்கும் மாஜி அமைச்சர் மீது சேலத்துக்காரர் அதிருப்தியில இருக்காராமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் சேலத்துக்காரர் அணியில் மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இருந்து வர்றாங்க.. தாமரை- இலைக்கட்சி இடையே ஏற்பட்ட பனிப்போரால தாமரையுடன் கூட்டணியை சேலம்காரர் முறித்துக்கொண்டதால டெல்டாவை சேர்ந்த ஒரு சில மாஜி அமைச்சர்கள் கட்சி ரீதியாக பெரிய ரியாக்க்ஷன் இல்லாம இருக்காங்களாம்.. மன்னர் மாவட்டத்தில் மாஜி அமைச்சர் விஜயமானவர் தான் உண்டு, தனது வேலை உண்டுன்னு இருந்து வருகிறாராம்..

சேலம்காரர் கட்டுப்பாட்டுக்குள் கட்சி வந்தாலும் தேனிக்காரர் அணி, குக்கர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகளை மீண்டும் சேலம்காரர் பக்கம் இழுக்கும் உள்ளிட்ட எந்த ஒரு செயல்களிலும் விஜயமானவர் ஈடுபடவில்லையாம்… மன்னர் மாவட்டத்தை பொறுத்தவரையில் இலை கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். தன்னை மீறி எந்த ஒரு விஷயமும் மேலிடத்திற்கு சென்று விடக்கூடாது என்பதிலும் குறிக்கோளாக இருக்கிறார். இந்த தகவல் தெரிய வந்த சேலத்துக்காரருக்கு, விஜயமானவரின் நடவடிக்கை அறவே பிடிக்கவில்லையாம்.. இதனால மன்னர் மாவட்டத்தில் விசுவாசியாக இருக்கக்கூடிய தனக்கு வேண்டியவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியில் சேலத்துக்காரர் நேரிடையாகவே இறங்கியுள்ளாராம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

fifteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi