திருவாரூர்: வாசனை திரவியம் தயாரிக்க வெளிநாடுகளுக்கு ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சத்தினை கடத்த முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வனத்துறையினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மூன்று டூ வீலர்களில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தப்பினார். அவர்கள் வைத்திருந்த பைகளில் ஐந்தரை கிலோ எடை கொண்ட திமிங்கல எச்சம் இருந்தது. பிடிப்பட்டவர்கள் திருச்சியை சேர்ந்த சுரேஷ் (42), நாகப்பட்டினத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (59), திருவாரூர் வேல்முருகன் (40), என்பதும் தப்பியோடியவர் திருவாரூரை சேர்ந்த பிரதீப் ராஜசேகர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வனஅலுவலர்கள், 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கில எச்சத்தின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியாகும். திமிங்கல எச்சம் வாசனை திரவியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருளாகும். இது வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்தது’ என்றனர்.