Sunday, September 15, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.34.51 லட்சம் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த ரூ.34.51 லட்சம் பறிமுதல்

by Ranjith

*தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் சிக்கியதால் பரபரப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை முழுவதும் நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.34.51 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்களுடன் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் அண்ணா மெயின் ரோடு முனுசாமி சாலையில் நேற்று முன்தினம் நடந்த சோதனையில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், சவுகார்பேட்டை பகுதியில் நடந்த சோதனையில் தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரவாயல் சுங்கச்சாவடி அருகே நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் பில்டிங் கான்ட்ராக்டர் கொண்டு வந்த ரூ.51 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலை மற்றும் மூர்ஸ் சாலையில் நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வருமான வரித்துறை அதிகாரிகள் நாராயணசாமி, அக்‌ஷய்குமார் ஆகியோர் கொண்டு வந்த ரூ.6.7 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்றில் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த ரூ.6.7 லட்சம் பணத்திற்கான உரிய ஆணங்களை கொண்டு வந்து காட்டியதை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப கொடுக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் ஆயிரம் விளக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi