நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாடு சித்த மருத்துவ மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குநர் கணேஷ் நேற்று காலை வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இங்கு வந்தேன்.
முதற்கட்டமாக பழுதான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் கல்லூரியில் தற்போது பிஎஸ்எம்எஸ் பயில 100 இடங்கள் உள்ளன. மேலும் 60 இடங்கள் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குற்றாலத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பண்ணை அமைப்பதற்கு ஏற்கனவே இடம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.