Thursday, October 3, 2024
Home » அதிமுக ஆட்சியில் கட்-ஆப் மார்க்கை விட குறைவாக எடுத்தவர்களுக்கு சீட் நாகை மீன்வள பல்கலை.,யில் பல கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக சேர்க்கை: தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

அதிமுக ஆட்சியில் கட்-ஆப் மார்க்கை விட குறைவாக எடுத்தவர்களுக்கு சீட் நாகை மீன்வள பல்கலை.,யில் பல கோடி லஞ்சம் பெற்று முறைகேடாக சேர்க்கை: தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்

by Dhanush Kumar
Published: Last Updated on

* 37 மாணவர்கள் டிஸ்மிஸ் தமிழக அரசு அதிரடி

நாகப்பட்டினம்: நாகை மீன்வளப் பல்கலைக் கழகத்தில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று மாணவர்களை சேர்த்த பல்கலை., தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முறைகேடாக சேர்க்கை பெற்ற 37 மாணர்கள் நீக்கப்பட்டனர். நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் கீழ் நாகப்பட்டினம் அருகே உள்ள தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி என 6 இடங்களில் உறுப்பு கல்லூரிகளும் தொடங்கப்பட்டது.

இந்த உறுப்பு கல்லூரிகளில் மீன்வள அறிவியலில் 120 இடங்கள், மீன்வள பொறியியல் 30 இடங்கள், ஆற்றல் மற்றும் சுற்றுசூழல் பொறியியல் 20 இடங்கள், மீன்வள உயிர்த்தொழில்நுட்பம் மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தில் தலா 40 இடங்கள் என 250 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். மேலும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மீன்வள அறிவியலில் 24 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சேர ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதன்பின் கட் ஆப் மார்க் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

இந்நிலையில் இப்பல்கலை., கீழ் இயங்கும் நாகப்பட்டினம் அருகே தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர (பி.எப்.எஸ்சி) கடந்த அதிமுக ஆட்சியில் 2019ம் ஆண்டு முதல் இருந்தே மாணவர் சேர்க்கையின் போது குறைந்த கட் ஆப் மார்க் பெற்ற மாணவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு கல்லூரியில் முறைகேடாக சேர்த்திருப்பதாக மாணவர்கள் சிலர் அரசுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை குறித்து விரிவான விசாரணையை நடத்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் எஸ்.பழனிசாமி தலைமையில் விசாரணை குழுவை தமிழக அரசு அமைத்தது.

அவர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலை.,யில் 2022-23ம் ஆண்டு சேர்க்கையில் இளநிலை மீன்வளப் பட்டபடிப்புகளுக்கு பொது பிரிவினருக்கு கட்-ஆப் மார்க் 190. மற்ற பிரிவினருக்கு கட்-ஆப் மார்க் 157. ஆனால் 127 மதிப்பெண்களுக்கும் குறைவாக பெற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்த 37 மாணவர்களிடம் பல கோடி ரூபாய் பெற்று கொண்டு பல்கலைக்கழகத்தில் சேர்த்தது தெரியவந்தது. இந்த முறைகேடுக்கு பல்கலை., தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜவகர், தட்டச்சர் இம்மானுவேல் ஆகியோருக்கு நேரடி தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். முறைகேடாக கல்லூரியில் சேர்ந்த 37 மாணவர்களும் நீக்கப்பட்டனர். இந்த பல்கலை.,யின் மற்ற உறுப்புக் கல்லூரிகளிலும் இது போன்ற முறைகேடு நடந்திருக்கிறதா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

* நடவடிக்கை நிச்சயம் துணைவேந்தர் உறுதி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் கூறுகையில், ‘இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்களிடம் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணம் பெற்றுக் கொண்டு சேர்க்கை வழங்கி உள்ளனர். முதலாம், 2ம் ஆண்டில் படித்து வந்த மாணவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இளநிலை மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கு பணம் கொடுத்து இடங்களை தேர்வு செய்துள்ள தகவலின் அடிப்படையில், பல்கலைக் கழகத்தில் குழு அமைத்து விசாரணை செய்து வருகிறோம். இந்த முறைகேட்டில் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கையூட்டல் எவ்வாறு? யார் மூலம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் அதன் அடிப்படையில் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும்’ என்றார்.

* விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

நீக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் விசாரணை குழு தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘குறைவான மதிப்பெண் பெற்ற நீங்கள் எப்படி பட்ட படிப்பில் சேர்ந்தீர்கள்? கலந்தாய்வில் பங்கேற்றீர்களா? கலந்தாய்வுக்காக கட்டணத்தை செலுத்தீனர்களா? அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? சேர்க்கைக்கான அதிகாப்பூர்வ உத்தரவை பல்கலைக்கழக இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தீர்களா? கலந்தாய்வின் போது கையெழுத்து இட்டீர்களா? இதற்கு உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi