Thursday, October 3, 2024
Home » சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளையில் விரைவில் விசாரணை

சீமானின் அவதூறு, ஆபாச பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு உத்தரவிடக்கோரி திருச்சி எஸ்பி வருண்குமார் வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளையில் விரைவில் விசாரணை

by Karthik Yash

சென்னை: அவதூறான, ஆபாசமான பதிவுகளை நீக்க கோரியும், அந்த பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறு உத்தரவிடக் கோரியும் திருச்சி எஸ்பி வருண்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி எஸ்பி வி.வருண் குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்ட எஸ்பியாக கடந்த 2023 ஆகஸ்ட் 11 முதல் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜூலை 11ம் தேதி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

இதையடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக ஊடகங்களில் நான் சாதி பாகுபாடு பார்ப்பதாக என்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். இதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் சீமானுடன் சேர்ந்து என்னை இழிவுபடுத்தி பேட்டி கொடுத்துள்ளனர். தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவுகள் வெளிவந்ததால் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி திருச்சி தில்லைநகர் போலீசில் மீண்டும் புகார் கொடுத்தேன். பெயர் தெரியாத 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணைக்கு பெயர் தெரியாத அந்த நபர்களின் எக்ஸ்தள ஐடிக்கள் தேவை. அப்போதுதான் சரியான விசாரணையை மேற்கொள்ள முடியும். இதையடுத்து, திருச்சி தில்லைநகர் போலீசார் பெங்களூருவில் உள்ள எக்ஸ் கார்ப்பரேசனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், உரிய தகவல்களை அந்த நிறுவனம் தரவில்லை. ஆன்லைன் மூலம் தொல்லை கொடுப்பது, போலி ஐடிகளை உருவாக்கி மற்றவர்களை கீழ்த்தரமாக சித்தரிப்பது போன்றவற்றை தடுக்கவில்லை என்றால் அதுபோன்ற நபர்களுக்கு எக்ஸ் கார்ப்பரேசன் துணை போகிறது என்றே அர்த்தம்.

எனவே, என்னை பற்றியும் திருச்சி தில்லை நகர் போலீசாரின் கோரிக்கையை எக்ஸ் கார்ப்பரேசன் பரிசீலிக்காததால் எக்ஸ் தளத்தின் பதிவுகள் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் பரவி வருகிறது. இந்த விஷயத்தில் எக்ஸ் கார்ப்பரேசன் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து திருச்சி தில்லைநகர் போலீசாரை தொடர்பு கொண்டு வழக்கு குறித்து கேட்டபோது அவர்களால் மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. எக்ஸ் கார்ப்பரேசன் உரிய தகவல்களை தரவில்லை என்றால் எங்களுக்கு சமூகத்தில் உள்ள மரியாதை குறைந்துவிடும்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பிரிவுகளின்படி சம்மந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் குறை தீர்ப்பு அதிகாரி தகவல் கேட்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் தரவேண்டும். அவர்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் இந்திய குறைதீர் அதிகாரிக்கு கடந்த செப்டம்பர் 26ம் தேதி எனது கோரிக்கைகள் முழுவதையும் அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை பதிவிட்டுள்ளதால் வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

எனது மற்றும் என் குடும்பத்தினர் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளை நீக்கவில்லை என்றால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். எனவே, ஆட்சேபனைக்குரிய பதிவுகளை எக்ஸ் தளம் நீக்குமாறு உத்தரவிட வேண்டும். உரிய தகவல்களை தராத அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். திருச்சி தில்லைநகர் போலீசார் கேட்ட தகவல்களை தருமாறு எக்ஸ் கார்ப்பரேசனுக்கு உத்தரவிட வேண்டும். எனது புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்குமாறு திருச்சி தில்லைநகர் போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமூக ஊடகங்களில் நான் சாதி பாகுபாடு பார்ப்பதாக என்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். சாதி பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையில்
அவரது கருத்துகள் உள்ளன.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi