கடற்பாம்பு என்பது கடலில் வாழும் நச்சுத் தன்மை வாய்ந்த பாம்பு இனத்தைச் சேர்ந்தது ஆகும். பெரும்பாலான கடற்பாம்புகள் எல்லா நேரமும் கடலிலேயே வாழ்வதற்கான தகவமைப்புக் கொண்டவை. இவற்றின் வால் துடுப்பு போல அமைந்திருக்கும். இவற்றால் நிலத்தில் அசையக்கூட முடியாது. கடற்பாம்புகள் இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலான வெதுவெதுப்பான கரையோரக் கடல் நீரில் காணப்படுகின்றன.
இவை அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் போன்ற குளிரான நீரில் காணப்படுவதில்லை. ஒரேயொரு சிற்றினத்தைத் தவிர அனைத்துக் கடற்பாம்புகளும் குட்டி ஈனுபவை. நீரில் பிறக்கும் குட்டிகள் தங்கள் வாழ்நாள் முழுதையும் நீரிலேயே கழிக்கின்றன.
எல்லாக் கடற்பாம்புகளுமே நச்சுத் தன்மை உடையவை. ஆனால், இவற்றால் மனித உடலுள் செலுத்தப்படும் நஞ்சின் அளவு தரைப்பாம்புகளை விடக் குறைவாக இருக்கும். அதே சமயம் எப்படி இருந்தாலும் கடற்பாம்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.