பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பள்ளி நிர்வாகங்களுக்கு போலீஸ் அறிவுறுத்தல்

தங்கவயல்: பள்ளி நிர்வாகம் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கோலார் மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோலார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிகில் உத்தரவின்படி நடந்த இந்த நடவடிக்கையில் அனைத்து துணை போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள், ஏ.எஸ்.ஐ.கள் பள்ளிகளுக்கு சென்று பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி பல அறிவுரைகளை வழங்கினர்.

பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாணவர்களின் பெற்றோருடன் அடிக்கடி கூட்டம் நடத்தி தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற வேண்டும். மாணவர்கள் பள்ளி வாகனங்களில் ஏற்றி இறக்குவதற்கு ஒவ்வொரு பள்ளி வாகனத்திற்கும் ஒரு உதவியாளரை நியமிக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி மண்டலம், வேகத்தடை போன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்கள் 40 கி.மீ. வேக வரம்பை மீறாத வகையில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.

வாகனத்திறன் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். குழந்தைகள் வாகனத்தின் உள்ளே நின்றபடி பயணம் செய்ய கூடாது. அனைத்து குழந்தைகளுக்கும் போதுமான இருக்கை வசதிகள் செய்யப்பட வேண்டும். ஓட்டுனர்களை பணியமர்த்துவதற்கு முன், அவரிடம் போலீஸ் துறையின் நன்னடத்தை சான்றிதழ் இருக்கிறதா? என் அறிய வேண்டும். ஓட்டுனர்களிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றனர். பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் அமைப்பை கட்டாயமாக பொருத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும், ஓட்டுநரின் நடத்தை குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.

ஐந்து குழந்தைகளுக்கு மேல் ஆட்டோக்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பக் கூடாது என, பெற்றோருக்கு போலீசார் தெரிவித்தனர். ஆட்டோ வாகனத்தில் எல்பிஜி கிட் பொருத்தப்பட்டிருந்தால், அது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சான்றளிக்கப்பட்டதா என கவனிக்க வேண்டும். இதை பெற்றோர் சரிபார்க்க வேண்டும். வாகன தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இருக்க வேண்டும் என்று‌ போலீசார் அறிவுறுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளி வானத்தின் பின்பக்க டயர்கள் கழன்றது. டிரைவரின் திறமையால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்