ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, வெளியூர் மாணவனும், உள்ளூர் மாணவனும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவன் மற்றொரு மாணவன் மீது கல்லை எடுத்து தலையில் தாக்கியதில், மற்றொரு மாணவனின் மண்டை உடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்தது வந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, அடிதடியில் ஈடுபட்ட மாணவர்களை காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு ,தலையில் காயமடைந்த மாணவனை ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிக்சை அளிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து இனி இதுபோன்ற பிரச்னைகளில் ஈடுபட கூடாது என அறிவுரை வழங்கி மாணவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவர்கள் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.